கணேஷ்-வசந்த்

பிப்ரவரி 27 - இன்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம். இவரின் எளிமையான எழுத்து நடையால் என்னைப்போல் பல வாசகர்களைக் கவர்ந்தவர். அதிலும் அவரதுபாத்திரங்களான கணேஷ்-வசந்த் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தவர்கள். கணேஷின் புத்திக் கூர்மையும், வசந்த்தின் துறுதுறு பேச்சும் எவரையும் எளிதில் கவர்ந்துவிடும்.

கணேஷ்-வசந்த்துக்கு வயதாகாதா என ஒருவர் கேட்டதற்கு சுஜாதா அவர்கள் அளித்த பதில்: "இன்றும் அவர்கள் இளமையாக இருப்பதன் ரகசியம் இதுதான். குற்றங்கள் மாறவில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்கும் முறைகள் முன்னேறிவிட்டன. அதற்கேற்ப கணேஷ் வசந்த்தும் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள்."

குற்றங்களை அலசி ஆராயவும், அதை கண்டுபிடிக்கவும் இருக்கும் முக்கியப் பாத்திரம் லாயராய் இருந்தால் சுலபம் என எண்ணி தான் சுஜாதா அவர்கள் கணேஷைப் படைத்தார். முதலில் வந்த சில நாவல்களில் கணேஷ் தனியாகத்தான் தன் அட்வென்ச்சர்ஸ்'ஐ செய்து கொண்டிருந்தார். பிறகு வசந்த்தும் வந்துவிட, இவர்களது சிந்திக்கும் விதம், வசந்த்தின் குறும்புப் பேச்சு, என கலந்துக்கட்டி இவர்கள் ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்கள்.

சுஜாதா அவர்களின் முதல் நாவல் "நைலான் கயிறு". இந்த நாவலிலேயே கணேஷ் அறிமுகமாகிவிட்டார். அதற்கு அடுத்த வந்த "அனிதா-இளம் மனைவி" நாவலிலும் கணேஷ் மட்டுமே இடம்பெற்றார். வசந்த் தோன்றிய முதல் நாவல் "ப்ரியா". இதிலும் கேஸ்(Case) வந்தபிறகு வசந்த்தை சென்னையிலேயே விட்டுவிட்டு கணேஷ் மட்டும் லண்டன் செல்வார். அதற்குப் பிறகு வந்த நாவல்கள் அனைத்திலும் இருவரும் இணைந்தே செயல்படத் துவங்கினர்.

கணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்

  1. நைலான் கயிறு
  2. அனிதா-இளம் மனைவி
  3. ப்ரியா
கணேஷ்-வசந்த் இனைந்து தோன்றும் நாவல்கள்
  1. ஆ..!
  2. மேற்கே ஒரு குற்றம்
  3. மேலும் ஒரு குற்றம்
  4. மீண்டும் ஒரு குற்றம்
  5. இதன் பெயரும் கொலை
  6. கொலை அரங்கம்
  7. வஸந்த் வஸந்த்
  8. பேசும் பொம்மைகள்
  9. மேகத்தை துரத்தியவன்
  10. யவனிகா
  11. கொலையுதிர் காலம்
  12. நில்லுங்கள் ராஜாவே
  13. ஐந்தாவது அத்தியாயம்
  14. மலை மாளிகை
  15. மறுபடியும் கணேஷ்
  16. ஆயிரத்தில் இருவர்
  17. அம்மன் பதக்கம்
  18. கணேஷ் X வசந்த்
  19. 24 ரூபாய் தீவு
  20. ஓடாதே
  21. நிர்வாண நகரம்
  22. எதையும் ஒரு முறை
  23. காயத்ரி
  24. மூன்று நிமிஷம் கணேஷ்
  25. விபரீதக் கோட்பாடு
சுஜாதா அவர்கள் "காந்தளூர் வசந்த்தகுமாரன் கதை" என்று ஒரு சரித்திர நாவல் எழுதினார். இதில் கணேஷ்-வசந்த் கதாப்பாத்திரம் போலவே கணேசப்பட்டர்-வசந்த்தகுமாரன் என இரு பாத்திரங்கள். இருவரின் செயல்களும் பாவனைகளும் கணேஷ்-வசந்த்தைப் போலவே இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில நாவல்கள் விட்டுப்போயிருக்கின்றனவா என எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் விட்டுப் போயிருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

கணேஷ்-வசந்த்தைப் பற்றி பேசிவிட்டு ஒரு ஜோக் சொல்லாமல் போனால் நல்லா இருக்காது. அதனால் இதோ உங்களுக்காக வசந்த் சொன்ன ஒரு ஜோக்.

"பாஸ், ரெண்டு நாய் நடுரோட்டில் @$#%^ பண்ணிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், டாடி அந்த ரெண்டு நாயும் என்ன பண்ணுதுன்னு கேட்டானாம். அவனோட அப்பா கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, முன்னாடி இருக்கிற நாய்க்கு ஒடம்பு சரியில்லை. அதான் பின்னாடி இருக்கிற நாய் அதை ஆஸ்பத்திரிக்கு தள்ளிக்கிட்டுப் போகுது'னு சொன்னாராம்."

வசந்த் சொன்ன ஜோக்குகளில் கணேஷ் கடுப்பாகாமல் சிரித்த ஒரே ஜோக் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனா வாத்தியாரே, கடைசி வரைக்கும் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்'க சொல்லாமலே போயிட்டீங்களே :(

பி.கு: கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா அளித்த பதில்: கடவுள் இருக்கிறாரா என்பது பிரச்சனை இல்லை. கடவுள் தேவைப்படுகிறார்.

வாத்தியாரே, அதேபோல், உங்களைப் போல ஒரு எழுத்தாளர் இருக்கார்களா என்பது பிரச்சனை இல்லை. தேவைப்படுகிறார்கள்.

Comments

கணேஷ் மட்டும் தனியாக வரும் நாவல்களில், என் பதிவில் விட்டுப்போனது:
1. ஒரு விபத்தின் அனாடமி
2. பாதி ராஜ்யம்
இந்த இரண்டு நாவல்களிலும் நீரஜா என்று கணேஷுக்கு ஒரு அசிஸ்டன்ட் உண்டு. கதைப்படி அப்போது கணேஷ் டெல்லியில் இருந்தார்.
கணேஷ்-வசந்த் தோன்றும் மேலும் சில நாவல்கள்
1. சில்வியா
2. மெரீனா
3. விதி
4. தண்டனையும் குற்றமும்
இதில் தண்டனையும் குற்றமும் நாவல், கணேஷ்-வசந்த் தோன்றி அவர்கள் கேஸில் தோற்றுப்போன நாவல்.

Popular Posts